இவன் எத்தனை வருஷமா எங்கள் வீட்ல இருகான்னு என்னால சரியா சொல்ல முடியாது. 'நீ பிறக்கறதுக்கு முன்னால இருந்தே இது இங்கதான் இருக்குது' ன்னு என் அம்மா சொன்னதா ஞாபகம். அது ஏதோ ஒரு மார்கழி மாதத்துல அப்பா கோயம்புத்தூர் போயிட்டு வர்றப்ப இத கையில தூக்கிட்டு வந்தாராம். இவன பாக்கற போதெல்லாம் "உனக்கும் எனக்கும் ஒரே வயதாடா பொடிபயலே?"னு கேட்கத்தோன்றும். இவனுக்கு வளர்ச்சியெல்லாம் இருக்காது ன்னு என்னுடைய சின்ன வயதிலேயே, யாரும் சொல்லி கொடுக்காமலேயே தெரிந்து கொண்டேன்.

இவன் எங்க ஈஸ்வர பெரியப்பா வீட்டில், இல்லையென்றால் வெங்கிடு சித்தப்பா வீட்டுல இருக்கிறதுகளைப்போல இல்லாம வித்தியாசமா இருப்பான். மேலெல்லாம் இரத்த சிவப்பு கலர்ல. எம்மேலயும் இவன் கலரு வருமானு உரசி உரசி பார்ப்பேன், ஒன்னும் நடக்காது. படுத்துட்டு இருக்கிறதவிட இந்த தவளை மாதிரி குத்த வச்சிகிட்டு உட்காருவான் பாரு.அடடா! அவ்வளவு அருமையாதான் இருப்பான்.

"இதுகிட்ட மனுஷன் போவானா?"னு அவரவர் ஒதுங்கிவிட எனக்கு மட்டும் செல்லமாயிட்டான். சொல்ல போனால் இவனை என்னோட சுயநலத்திற்கு நான் பயன்படுத்தி கொண்டதெல்லாம் பாவம் இவனுக்கு தெரியாது.

ஆனாலும் சிலநேரத்துல கொதிச்சுத்தான் போயிடுவான். தெரிஞ்சவங்க யாராச்சும் பக்கத்துல இருந்தேதான் ஆகனும். "இப்படி ஒரு கண்றாவி தேவையா?"னு அம்மா கேட்டத நானும் கண்டுக்கல. கொஞ்சம் ஏமாந்தோம்னா அவ்வளவுதான், என்ன கிடைக்கிதோ அத அப்படியே கபளீகரம் பண்ணிடுவான்.
எங்கப்பா என்னமோ மெக்கானிக்தான் தான்,ஆனா இந்த பாவிபயதான் எனக்கு திருபுளியையும், டெஸ்டரையும் எப்படி 'யூஸ்' பண்ணனும்னு சொல்லிகொடுத்தான். அதுக்கப்புறம் நான் சகலத்தையும் கத்துக்கிட்டு இவனை போட்டு படுத்தி எடுத்துட்டேன். எங்கிட்ட இத்தன அடி வாங்குறானே, ஏதாச்சும் ஒரு வார்த்தை? 'ம்கூம்'.

ஒருநாள் என்னாச்சுங்கறிங்க? ஒரு புது சட்டைய போய் வாங்கி இவங்கிட்ட கொடுத்தா, அடுத்த நிமிஷமே அதோட ஒரு கைய பிச்சு சின்னாபின்னமாக்கி குண்டு விழுந்த இலங்கை மாதிரி ஆக்கி வச்சிருக்கான். அன்னிக்கு வாங்குனான் என்கிட்ட பேயடி, அதுக்கப்புறம் ஒரு மாசம் நா அவன் கிட்டகூட போகலியே. கெடக்கட்டும் அப்பதான் புத்திவரும்னு விட்டுடேன். என்னமோ மனசுதான் கேட்கவே மாட்டேனுச்சி, அப்புறமா போனா போகுதுனு நானே போயி அவன சேத்திகிட்டேன். அப்புறம், அவன் இல்லனா எனக்கு எப்படி பொழுதுபோகும்.

இவனுக்கு இத்தபெரிய வாலு மொலச்சிருக்குனு யாருக்குமே தெரியாது, அந்தமாதிரிதான் வெளியில காட்டிக்குவான்.ஆனா எனக்குதான தெரியும் இவனப்பத்தி முழுசா!!! சனி,ஞாயிறு லீவு விட்டா இந்த புளியமரமே கதிண்ணு கெடந்தாலும், இவன எதுலயும் சேத்துகிறதில்ல. இந்த திங்ககிழமை அவசரஅவசரமா குளிச்சிட்டு வந்து ஈரத்தலையோட நிக்கும்போதுதான் இவன் ஞாபகம் வரும் 'எங்கடா இருக்குற நீ 'ன்னு மனசு அடிச்சுகிட்டே தேடுவேன்.

இப்படித்தான் ஒருநாளு நான் இல்லாத நேரத்துல இந்த வெள்ளியங்கிரி பையன் வந்து தொட்டிருக்கான்.அவ்வளவுதான், கணக்கு வழக்கில்லாமல் அடிய வாங்கி கட்டிக்கிட்டு போயிருக்கான். பின்ன, இவன் எனக்கு மட்டுந்தான் அடங்குவான். நா சொல்றததான் கேட்பான். அதுக்கபுறம் வெள்ளிய எப்ப கூப்டாலும் இன்னும் அவன் 'அந்த சனியன் இருக்கா?'னு கேட்பான். 'சின்ன சின்ன புள்ளைக இருக்கற வீட்டுல இந்த தொல்லையெல்லாம் எதுக்கு?' ன்னு என் அம்மாவோட போர் முரசைக் கூட கேக்காம 'போம்மா, இதுல்லாம இன்னும் எத்தனைபேர் இருக்காங்க'னு சொல்லி இவனுக்காக வாதாடியிருக்கிறேன்.

மெல்ல மெல்ல வருஷங்கதான் ஓடிபோச்சு, நானும் ஸ்கூல் முடிச்சு, காலேஜ் முடிச்சு, வேலைக்கும் வந்தாச்சு. நான் காலேஜ் படிக்கும்போதே அவனுக்கு முடியாமல் போயிருச்சாம். நா இருந்தாலாவது பாத்துப்பேன்,பாவம் அவன். கடைசியா ஊருக்கு போனப்ப அவன பார்தேன், வீடுபூரா தேடினதுக்கப்புறம் நான் ஒரு மூலையில அதே பழையமாதிரி குத்தவச்சு உட்கார்ந்துட்டு இருந்தான். அந்த கலரெல்லாம் போயி கருத்து போய்ட்டான். கிட்டதட்ட படுத்த படுக்கைதான். ரொம்ப பரிதாபமா இருந்துச்சு.அப்படியே மெல்ல அவனோட முகத்த தடவிக்கொடுத்தேன். அப்ப அவன் என் கை மேல சாய்ந்தது என்னவோபோல இருந்துச்சு.

கொஞ்ச கொஞ்சமா என்னோட வேலை அவனை மறக்கடித்தே விட்டது. போனவாரம் அடையாருல ஒரு கடைக்குப்போய் 'Mixie' வாங்கிட்டு அப்படியே 'can u show me a latest model Philips ironbox?'னு கேட்கும் போதுதான் மறுபடியும் அவன் ஞாபகம் வருது. இப்ப எனக்கு இன்னொருத்தன் கிடைச்சுட்டான். ஆனா இவன் அவனப்போல குறும்பு இல்ல. அவன் அவன்தான்.

- இப்படிக்கு “சக்திவேல் லோகநாதன்”

3 comments:

excellent!!!! fantabulous!!!!

January 9, 2009 at 6:40 AM  

Idhula AVAN AVAN nu sollittu, yar andha avannu sollave illaye.............

January 21, 2009 at 12:27 AM  

super daa

February 6, 2009 at 8:24 PM  

Newer Post Older Post Home